ரெய்டு நடத்தி.. சாலையைத் தோண்டி செக்கப் செய்து.. கெஜ்ரிவாலை முந்தினார் செளகான்
போபால்: ஊழலுக்கு எதிராகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் முன்பை விட இப்போது பலமடங்கு வேகத்துடன் பல்வேறு மாநிலங்களும் நடவடிக்கையில் குதித்துள்ளன. எல்லாம் கெஜ்ரிவால் எபக்ட்தான் காரணம்.. அந்த வரிசையில் கெஜ்ரிவாலையே பீட் செய்யும் அளவு படு வேகமாக செயல்படுகிறார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான்.
கெஜ்ரிவால் மக்கள் சந்திப்பைத்தான் நடத்தினார். ஆனால் செளகானோ நேரடியாக ரெய்டு போய், மக்களைச் சந்தித்து, சாலையின் தரத்தை அறிய அதைத் தோண்டி எடுத்து அசத்தி விட்டார்.

டெல்லியில் ஜனதா தர்பார் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூடும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கெஜ்ரிவால் திணறி வரும் நிலையில் தனது அனுபவத்தால் படு சாதுரியமாக அதை சமாளித்து, தீர்வுகளையும் கண்டு அசத்திக் கொண்டிருக்கிறார் செளகான்.
தனது முதல் கட்ட மக்கள் சந்திப்பை நடத்தி முடித்து விட்டு அடுத்த ரவுண்டுக்கும் ரெடியாகி வருகிறார் செளகான்.
கோலர் மாநகராட்சி அலுவலகத்தில் அவர் மக்கள் சந்திப்புக்காக போனபோது அங்கு பணியில் சரியாக இல்லாமல் செயல்பட்ட இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார். மேலும், அலுவலக வளாகத்தி் புகை பிடித்த ஒரு இணை இயக்குநர் மற்றும் மேலும் இருவருக்கு அபராதம் விதித்தார்.
கோலர் மாநகராட்சி அலுவலகத்தில் தான் ஒரு விண்ணப்பத்துக்காக அணுகியதாகவும், ஆனால் அங்கு சரிவர பதில் கிடைக்கவில்லை என்றும் முதல்வர் செளகானுக்கு பிரேம் நாராயண் கோசி என்பவர் கடிதம் மூலம் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேரடியாக கிளம்பி போய் விட்டார் முதல்வர்.
பிரேம் கூறியிருந்த கோப்புகளைக் காட்டுமாறு அங்கு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன் பின்னர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் ஒவ்வொரு பிரிவாக அவர் ரெய்டு போனார். அதிகாரிகளைத் துருவித் துருவி விசாரித்தார். பிறகு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் பத்ரகார் காலனிப்பகுதிக்கு சென்றார். அங்கு புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. அதன் தரம் சரியாக இருக்கிறதா என்பதை அறிய சாலையை ஒரு இடத்தில் தோண்டச் சொல்லி சோதனையிட்டார். மேலும் டெஸ்டிங் மெஷினையும் கொண்டு வரச் சொல்லி சாலையின் தரத்தைப் பரிசோதித்தார். பின்னர் சாலையின் தரத்தில் திருப்தியடைந்த அவர், சிலர் ஷெல்டர் ஹோம்களுக்கு சென்றார்.
செளகானுடன் அவரது மனைவியும் இதில் இணைந்து கொண்டார். அதிகாரிகளும் உடன் வந்தனர். பின்னர் ஹோமில் உள்ளவர்களிடம் என்ன குறை உள்ளது, நன்றாகப் பார்க்கிறார்களா என்று விசாரித்தறிந்தார் செளகான்.
கெஜ்ரிவாலின் ஜனதா தர்பாரில் மக்கள்தான் கெஜ்ரிவாலைப் போய்ப் பார்க்கின்றனர். ஆனால் செளகானோ ஒரு படி இறங்கி அவரே நேரடியாக மக்களைப் பார்க்கிறார். ஊழல்வாதிகளுக்குக் கடும் எச்சரிக்கையும் விடுத்து வருகிறார். ஊழல் செய்வோர், லஞ்சம் வாங்குவோர் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சபாஷ்.. சரியான போட்டிதான்.












Click it and Unblock the Notifications