தனிமையில் பிரார்த்தனை செய்வதாக இளம் பெண்ணை கூட்டி சென்று பலாத்காரம் செய்த பாதிரியார்
திருவனந்தபுரம்: தனிமையில் பிரார்த்தனை செய்யலாம் என்று அழைத்துச் சென்று இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததோடு, போலீசாரையும் தாக்கிய கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். இவரது சபைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பாதிரியார் ஜான் மிரட்டி பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தனர்.
இதைதொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது: நான் அந்த சபைக்கு அடிக்கடி சென்று வருவேன். என்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்துவதாக கூறி பாதிரியார் ஜான் மிரட்டி பலாத்காரம் செய்து விட்டார்.
இதுபற்றி வெளியில் கூறினால், கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார். மீண்டும் மீண்டும் உறவுக்கு வற்புறுத்தி அவர் தொந்தரவு செய்ய தொடங்கியதால், எனது உறவினர்களிடம் எனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தேன். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து போலீசார், பாதிரியார் ஜானை விசாரணைக்கு வரும்படி காவல்நிலையத்திற்கு அழைத்தனர். ஆனால், ஜான் தனியாக செல்லாமல், அவரது ஆதரவாளர்கள் என்று கூறப்படும் நபர்களோடு காவல் நிலையம் சென்றுள்ளார்.
விசாரணை நடைபெறும்போது வேறு நபர்கள் உடன் இருக்க கூடாது என்பதால், ஜானுடன் வந்தவர்களை வெளியேறுமாறு போலீசார் தெரிவித்தனர். இதற்கு ஜான் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார்.
டி.எஸ்.பி. சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரை ஜான் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து மற்ற போலீசார் பாதிரியார் ஜானியை மடக்கி பிடித்தனர். இதனால் போலீஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஜானை போலீசார் கைது செய்து நெய்யாற்றின்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பலாத்காரம் மட்டுமின்றி, போலீசாரை தாக்கியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.