பெங்களூரில், தமிழ் வேட்பாளர் சம்பத்ராஜ் ஆதரவாளர்கள் மீது பாஜக வேட்பாளர் ஆதரவாளர்கள் தாக்குதல்
பெங்களூர்: தமிழரான சம்பத்ராஜ் போட்டியிடும், பெங்களூர் சிவி ராமன் நகர் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் நடுவே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் சார்பில் சிவி ராமன் நகர் தொகுதியில், பெங்களூர் நகர மேயரான சம்பத்ராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். தமிழரான இவர், சிட்டிங் எம்எல்ஏவான ரகுவை எதிர்த்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் சிவி ராமன் நகர் தொகுதியிலுள்ள விஸ்வேஸ்வரய்யா கல்லூரி பூத் (எண் 113) பகுதியில், வாக்குப்பதிவு நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்பார்வையிட்டு வந்த கோனேனஅக்ரஹாரா வார்டு கவுன்சிலர் சந்திரப்பா ரெட்டி மற்றும் அவர் மகன்
மதுசூதன் ரெட்டி மீது ரகு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் இருவரும் காயமடைந்தனர். அருகேயுள்ள மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாாக
ரகு ஆதரவாளர்கள், சந்திரசேகர் ரெட்டி மற்றும் நாகராஜ் ரெட்டிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி மாநிலம் முழுக்க சராசரியாக 36 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது. ஆனால், சிவி ராமன் நகர் தொகுதியில் வெறும் 14 சதவீதம்தான் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், இதுபோன்ற கலாட்டாக்கள் மேல்தட்டு மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த தொகுதியில், வாக்காளர்களை வாக்கு சாவடி பக்கம் வர உதவாது. இது தமிழ் வேட்பாளரான சம்பத்ராஜ் வெற்றியை பாதிக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.