விடுதி டாய்லெட்டில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய 10ம் வகுப்பு மாணவி
நிஜாமாபாத்: ஆந்திராவில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி விடுதியின் கழிவறையில் ஆண் குழந்தையை பெற்று அதை ஜன்னல் வழியாக வீசிவிட்டார்.
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பிட்லமில் கஸ்தூரிபா காந்தி பாலிகலா வித்யாலயம் உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் 7 மாத கர்ப்பணியாக இருந்துள்ளார். அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விடுதி அறையில் உள்ள கழிவறைக்கு சென்று ஆண் குழந்தையை பெற்று அதை ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டார்.
குழந்தை அழும் சத்தம் கேட்ட பிற மாணவிகள் இது குறித்து பள்ளி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து காயமடைந்து கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை வழியிலேயே இறந்துவிட்டது.
இதற்கிடையே மாணவி பன்ஸ்வாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாணவியின் பெற்றோர் பள்ளி விடுதிக்கு விரைந்து வந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த செல்போன் ரிப்பேர் செய்யும் கோபால் தான் தங்கள் மகளின் கர்ப்பத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர்.
கோபாலுக்கும் மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications