பாலியல் தொல்லை.. பெற்றோரிடம் கூறிய சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றிய இளைஞர்கள்!
டெல்லி: டெல்லியில் பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள், மைனர் சிறுமியை கட்டாயப்படுத்தி அமிலம் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சங்கம் விஹார் பகுதியில் வசித்து வரும் 10ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த சில வாரங்களாக பின் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர். இதனால் பயந்து போன அச்சிறுமி, இது தொடர்பாக தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்தனர் அவரது பெற்றோர். பின்னர் பள்ளி நிர்வாகம் அச்சிறுமிக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மீண்டும் அவர் பள்ளி செல்லத் தொடங்கினார்.
சிறுமி மீண்டும் பள்ளிக்கு வருவதைத் தெரிந்து கொண்ட அந்த இளைஞர்கள் மீண்டும் தங்களது தொல்லையைத் தொடங்கினர். நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து அச்சிறுமி வெளியே வந்தபோது, நுழைவு வாயிலிலேயே அவரை அந்த இளைஞர்கள் வழி மறித்துள்ளனர்.
பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அச்சிறுமியில் வாயில் அமிலத்தை ஊற்றிய இளைஞர்கள், அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்கள்.
வலியால் துடித்த அச்சிறுமியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது சிறுமியின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சமபவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.