சி.என்.ஆர். ராவ், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது.. வழங்கினார் பிரணாப்
டெல்லி: பிரபல விஞ்ஞானி பேராசிரியர் சிஎன்ஆர் ராவ் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருதினை வழங்கிக் கெளரவித்தார்.
இந்தியா எத்தனையோ விளையாட்டு ஜாம்பவான்களைப் பார்த்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம்... சச்சினுக்குக் கிடைத்துள்ளது. ஆம்.. அவர்தான் பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ள முதல் விளையாட்டு வீரர் ஆவார்.
ராஷ்டிபரதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராவுக்கும், சச்சினுக்கும் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா விருதினை வழங்கினார். நிகழ்ச்சியில் சச்சனின் மனைவி அஞ்சலி, மகன், மகள் நேரில் கலந்து கொண்டு சச்சின் விருது வாங்கியதைப் பார்த்து ரசித்தனர்.

தியான் சந்த்துக்கு நிராகரிப்பு
நீண்ட காலமாகவே இந்திய ஹாக்கியின் தந்தை என்று கூறப்படும் தியான் சந்த்துக்கு பாரத ரத்னா விருது தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

ஏன் நிராகரிப்பு...
விளையாட்டு உலகைச் சேர்ந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது தர சட்டத்தில் இடமில்லை என்று அதற்குக் காரணம் கூறி வந்தனர்.

சச்சினுக்காக திருத்தப்பட்ட விதிமுறைகள்
ஆனால் சச்சினுக்கு விருது தரப்பட்டுள்ளது. இப்போது மட்டும் வழி பறிக்கக் காரணம், திருத்தப்பட்ட விதிமுறைகள்தான். சச்சினுக்கு விருது தர வேண்டும் என்பதற்காகவே விதிகளைத் திருத்தியுள்ளனர்.

முதல் வீரர்.. இளம் வீரர்
இதன் மூலம் பாரத ரத்னா விருது பெறும் முதல் வீரர், 40 வயதேயான இளம் பாரத ரத்னா விருது பெறுபவர் என இதிலும் சாதனை படைத்துள்ளார் சச்சின்.

டெல்லியில் முகாம்
விருது பெறுவற்காக நேற்றே மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோருடன் டெல்லி வந்து விட்டார் சச்சின்.

ஏற்கனவே எம்.பி.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின் பேரில் ராஜ்யசபா எம்.பியாகவும் இருக்கிறார் சச்சின்.

தாய்மார்களுக்கு சமர்ப்பணம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் சச்சின். இதையடுத்து அவருக்கு விருது வழங்குவதாக அறிவித்தது மத்திய அரசு. இந்த விருதை நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார் சச்சின்.

சி.என்.ஆர். ராவ்
விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார். 79 வயதாகும் அவர் தற்போது பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அட்வான்ஸ்ட் அறிவியல் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றுகிறார்.

வேதியியல் நிபுணர்
நாட்டின் முதன்மையான வேதியியல் நிபுணர்களில் ராவும் ஒருவர். இந்த வயதிலும் கூட தனது ஆய்வகத்தில் பல மணி நேரம் செலவிடக் கூடிய அருமையான விஞ்ஞானி. 1500க்கும் மேற்பட்ட ஆய்வுத் தாள்களை இவர் சமர்ப்பித்துள்ளார்.

நோபல் பரிசுக்குத் தகுதியானவர்
நோபல் பரிசுக்குத் தகுதியான சிறந்த விஞ்ஞானி ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிப்படையாக பேசக் கூடியவரான ராவ், அறிவியல் துறையில் பாரத ரத்னா விருது பெறும் 4வது நபர் ஆவார்.












Click it and Unblock the Notifications