மோதிக் கொண்ட அண்ணன் தம்பி.. ஒருவர் பலி... தேர்தலில் நேருக்கு நேர் மோதிய மனைவிமார்கள்!
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்டில் எதிரும் புதிருமாக இருந்த அண்ணன் தம்பிகளில் ஒருவரை மற்றொருவர் கொன்ற சம்பவத்தை அடுத்து அவர்களது மனைவிகள் ஜாரியா தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகின.
இதில் ஜாரியா தொகுதியில் ஓரகத்திகள் போட்டியிட்டனர். அதில் ஒருவர் பாஜக சார்பில் போட்டியிட்ட ராகினி சிங். மற்றொருவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பூர்ணிமா சிங்.
இவர்களது கணவர்களும் தேர்தல் விவகாரத்தில் மோதி கொண்டனர். இதனால் பூர்ணிமாவின் கணவர் நீரஜ் சிங்கை, அவரது அண்ணனும் ராகினி சிங்கின் கணவருமான சஞ்சீவ் சிங் கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜாரியாவில் ராகினியை விட 2500 வாக்குகளுக்கு மேல் அதிக வாக்குகளை பெற்று பூர்ணிமா முன்னிலையில் உள்ளார். இவரது கணவர் முன்னாள் துணை மேயராக இருந்தார்.