பிரசாந்த் பூஷன் விமர்சனம்: பதவி விலக தயங்கமாட்டோம்- உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முன்வைத்த விமர்சனம் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி பொய் சொல்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தயங்குகிறது என்று கூறியிருந்தார்.

பிரசாந்த் பூஷனின் இந்த பேட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டு சென்ற மத்திய அரசு தரப்பு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதையடுத்து இந்த விவகாரத்தை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிபதி லோதா தலைமையிலான பெஞ்ச். அப்போது, பிரசாந்த் பூஷன் கருத்து கடும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுபோன்ற யூகங்கள் அடிப்படையிலான கருத்துக்கள் நீதிமன்றம் இயங்குவதையே பாதித்துவிடும்.
நீதிமன்றங்கள் அச்சமின்றியும், பாரபட்சமின்றியும் இயங்கி வருகின்றன. சமயத்துக்கு ஏற்ப உரிய உத்தரவுகளை பிறப்பிக்க நாங்கள் தவறுவதில்லை. பிரசாந்த் பூஷனின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பதை ஏற்படுத்தும். எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப கடைசி நிமிடம் வரை செயல்பட்டு வருகிறோம்.
எங்கள் மீது சிறிது அளவு சந்தேகம் ஏற்பட்டாலும், பதவியை உதற தயங்க மாட்டோம் என்றனர். இதைத் தொடர்ந்து பிரசாந்த் பூஷன் தமது கருத்துகளுக்கு நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினார். இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications