நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம்: அரசிதழில் வெளியிடப்பட்டது!
டெல்லி: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் குழுவே (கொலீஜியம்) நியமிக்கும் முறைக்கு மாற்றான, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம், மத்திய அரசிதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறையால் வெளியிடப்பட்ட அரசிதழில், அரசியல் சாசன 99-வது திருத்தச் சட்டத்துடன் கூடிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம், திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, 5 நிதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வால் புதன்கிழமை (ஏப்.15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கு 2 நாள்களுக்கு முன்பே இந்தச் சட்டம் அமலுக்கு வருவதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம், "கொலீஜியம்' முறை முடிவுக்கு வருகிறது.
எனினும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற புதிய அமைப்பு செயல்படத் தொடங்குவதற்கு சிலகாலம் ஆகும்," என்றனர்.
நீதிபதிகள் நியமன ஆணையதுக்கான 2 நியமன உறுப்பினர்களை பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் அல்லது தனிப்பெரும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும்.












Click it and Unblock the Notifications