வாரணாசி- கொழும்பு இடையே நேரடி விமான சேவை.. அதிர்ச்சியில் சீனா
வாரணாசி- கொழும்பு இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளதால், சீனா- இலங்கை இடையிலான நெருக்கம் குறையும் என சர்வதேச அரசியல் அரங்கில் கூறப்படுகிறது.
டெல்லி: இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களில் ஒன்றான வாரணாசியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புகு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதால், சீனா அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த விமானமானது பல வகையிலும் சீனாவுக்கு இடையூறாகவே அமையும்.
கடந்த 12ம் தேதி இலங்கை சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற (புத்த பூர்ணிமா) வெசாக் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோரை சந்தித்து, பல்வேறு புது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் அங்கு பேசுகையில், நான் புத்தர் அவதரித்த இந்திய மண்ணில் இருந்து 125 கோடி மக்களின் வாழ்த்துக்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

புத்தர் அவதரித்த பூமி
இந்தியா புத்தர் அவதரித்த பூமி. இந்தியாவின் கொள்கை வேரை இலங்கை கொண்டுள்ளது. நமது பிராந்தியம் மதிப்பிட முடியாத புத்தரையும், அவரது போதனைகளையும் உலகத்துக்கு பரிசாக வழங்கியுள்ளது. வெறுப்பும், வன்முறையும் உலக அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இரு நாடுகளும் வன்முறையை வெறுப்பதில் ஒன்றாக இருக்கிறோம். நாம் நண்பர்களாக உள்ளோம்.

இந்தியாவும் இலங்கையும் நண்பர்கள்
22 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் கூறிய அறிவுரை தற்போது 21-ம் நூற்றாண்டிலும் நமக்கு பொருத்தமானதாக உள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னோக்கி செல்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா முழு உதவி செய்யும். வருகிற ஆகஸ்டு மாதத்தில் கொழும்பு- வாரணாசி இடையே ஏர் இந்தியா விமான சேவை தொடங்க உள்ளது. இது இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்
வாரணாசி, கொழும்பு ஆகிய 2 நகரங்களையும் ஒன்றாக இணைப்பதால், இரு நாடுகளுக்கு இடையே ஆன்மிக, கலாசார வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான ஆன்மீக சுற்றுலா அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதேபோல இலங்கையில் உள்ள ராமாயானம் தொடர்பான இடங்களைப் பார்க்கச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

சீனாவின் மையம் தகரும்
இலங்கையைப் போலவே, சீனாவிலும் புத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் அதிகம் உள்ளனர். மேலும் பெளத்தர்களின் மையமாகவும் சீனா திகழ்கிறது. ஆனால் திபெத் விவகாரத்தில் சீனாவின் போக்கு அந்த நாட்டு அரசு மதத்திற்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை இந்தியா தற்போது பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

செலவு குறையும்
இலங்கையின் சக நாடு என்ற அடிப்படையில், சீனா மிக நெருங்கிய நட்புறவை பின்பற்றி வருகிறது. இந்நிலையில், இந்தியா, அதனைத் தடுக்கும் வகையில், வாரணாசி - கொழும்பு நேரடி விமான சேவையைத் தொடங்க உள்ளது சீனாவுக்கு பின்னடைவைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள பெளத்த மதம் தொடர்பான இடங்களுக்கு வருவோரின் செலவும் பெருமளவில் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

40% செலவு குறையும்
இலங்கையிலிருந்து நேரடியாக வாரணாசிக்கு வரும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் இலங்கை பெளத்த மதத்தினர் புத்தகயா போன்ற இடங்களுக்கு இனி எளிதாக செல்ல முடியும். அவர்களுக்கு பயணச் செலவில் 40 சதவீதம் வரை குறையும். இந்தியா - இலங்கை இடையிலான நட்புறவு, வெறும் வர்த்தகம் என்பதை கடந்து, ஆன்மிக ரீதியாக ஒன்றினையும் வாய்ப்பு உருவாகும் என்பதால், இலங்கை மற்றும் சீன உறவில் மாற்றம் வரும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

ரூ. 25,000 கட்டணம்
தற்போது கொழும்பிலிருந்து உத்தரப் பிரதேசம் அல்லது பீகாருக்கு வர நேரடியாக விமான வசதி இல்லை. இதனால் ரூ. 25,000 வரை விமானக் கட்டணமாக செலவிட வேண்டியுள்ளது. தற்போது வாரணாசிக்கு நேரடி விமான வசதி கிடைக்கவிருப்பதால் இதில் பெருமளவு குறையும்.

அதிருப்தியில் சீனா
வாரணாசி-கொழும்பு விமான சேவை அறிவிப்பு சீனாவுக்குக் கடும் அதிருப்தியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருபக்கம் பாகிஸ்தான் வழியாக, இந்தியாவுக்கு நெருக்கடியை அளித்து வரும் சீனா, தற்போது இந்திய அரசின் புதுவித ராஜதந்திர நடவடிக்கைகளால் அதிர்ச்சி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications