இந்தியா முழுவதும் ஆணுறைக்கு தட்டுப்பாடு: 'எய்ட்ஸ்' நோய் பரவும் அபாயம் !
டெல்லி: நாடு முழுவதும், பாதுகாப்பான உடலுறவுக்கு இலவசமாக வழங்கப்படும் ஆணுறைக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக் கொள்ளும், பெண் செக்ஸ் தொழிலாளர்களாலும், அவர்களால் பல ஆண்களுக்கும் எச்.ஐ.வி., நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆட்கொண்டுள்ள கொடிய உயிர்க்கொல்லி நோயான எய்ட்சுக்கு லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். கடந்த 2013ல் மட்டும், உலகம் முழுவதும் 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1.3 லட்சம் பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர் என்று உலக சுகதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் என்னும் உயிர்கொல்லி நோயை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி மத்திய, மாநில அரசுகளும், 'நாகோ' எனப்படும் தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பும் மேற்கொண்ட அதிதீவிர முயற்சிகளால் இந்த நோய் ஓரளவு பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அத்தகைய முயற்சிகளில் அண்மை காலமாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு பொறுப்பேற்ற பின்னர் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கு அடிப்படையாக இருக்கும் ஆணுறை தயாரிப்புக்கான நிதியை 5ல், 1 பங்காக குறைத்து விட்டது. இதனால், கடந்த, 17 மாதங்களாக, சிறிது சிறிதாக குறைந்த ஆணுறை இருப்பு, தற்போது பல மாநிலங்களில், ஒரு சில நாட்களுக்குத் தான் நீடிக்கும் என்ற அவலநிலையில் உள்ளது.
மத்திய அரசு பிற துறைகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருவதால் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான ஆணுறை தயாரிப்புக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை எனவே வழக்கமான அளவிற்கு தயாரிக்கப்படும் ஆணுறைகள் தயாரிக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் இலவச ஆணுறை இருப்பு குறைந்துள்ளது.
டெல்லியில் சில வாரங்களுக்கு மட்டுமே ஆணுறை இருப்பு இருக்கும் என்றும் சில மாநிலங்களில் அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு மட்டுமே இருப்பு இருக்கும் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications