காங்கிரஸ் படுதோல்வியடைய ராகுல் காரணம் அல்ல- அந்தோணி குழு அறிக்கை
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு ராகுல்காந்தி காரணம் இல்லை, ஊடகங்கள்தான் காரணம் என்று தோல்வி பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணி அறிக்கையளித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 44 இடங்கள்தான் கிடைத்தன. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி பற்றி ஆராய அக்கட்சி மேலிடம், முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு விசாரணை நடத்தி நேற்று தனது அறிக்கையை கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் தாக்கல் செய்தது.
இதுகுறித்து ஏ.கே. அந்தோணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அந்தோணி, தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்தி காரணம் இல்லை. அறிக்கை குறித்தான எந்த தகவல்களையும் நான் தெரிவிக்கப்போவது இல்லை. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியும் தான் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரத்தை முன் எடுத்து சென்றனர். தோல்விக்கு இதுதவிர வேறு எதாவது காரணம் இருக்கும். என்றார்.
இதனிடையே காங்கிரஸ் தோல்விக்கு, ஊடகங்கள்தான் முக்கிய காரணம் என்று அறிக்கையில் அந்தோணி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மீது சில ஊடகங்கள் தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளதாம் அந்த அறிக்கை.