என் சமூகத்தை கேவலமா பேசுறாங்க.. சேற்றை வாரி இறைக்கிறாங்க.. குஜராத்தில் குமுறிய பிரதமர் மோடி!
அகமதாபாத்: குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில் மெகா ரோட் ஷோ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, எனது சமூகத்தை பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்படி எல்லாம் விமர்சிக்கிறார்கள் என பார்த்திருப்பீர்கள் என உருக்கமாகப் பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி மாநிலம் மாநிலமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று குஜராத் மாநிலத்திற்குச் சென்றார்.

அகமதாபாத்தில் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதைத்தொடர்ந்து மெஹ்சானா நகருக்கு சென்று புகழ்பெற்ற வாலிநாத் மகாதேவ் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் மெஹ்சானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து, நவ்சாரி நகரில் மெகா ரோட் ஷோ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "குஜராத்தில் இன்று மூன்றாவது நிகழ்ச்சியாக இதில் கலந்துகொள்கிறேன், மோடி எதைச் சொன்னாரோ, அதைச் செய்வார், மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றப்படுவதாகவே இருக்கும் என்று நாட்டின் ஒவ்வொருவரும் கூறுகின்றனர்." என பெருமிதத்தோடு பேசினார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "எனது சமூகத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காங்கிரஸ் நாட்டிற்காக எதுவும் செய்வதில்லை. என்னை அவமதிப்பதை தவிர, காங்கிரஸ் கட்சியிடம் வேறு எந்த திட்டமும் இல்லை.
என்னை பற்றி எந்த அளவுக்கு அவதூறாகப் பேசுகிறார்களோ, அந்த அளவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் தீர்மானம் வலுவடையும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் மறந்து விடுகிறார்கள். அவர்கள் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ, அவ்வளவு பெருமையாக 370 இடங்களில் தாமரை மலரும்.
வாரிசு அரசியலின் பிடியில் சிக்கிய ஒரு கட்சிக்கு, தங்கள் குடும்பத்தை விட வேறு யாரும் முக்கியமில்லை. நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. பாஜக அரசு நாட்டின் ஏழை மக்களுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.
சமூகத்தில் கடைசி நபரின் வாழ்க்கையையும் மாற்றுவதே இந்த மோடியின் உத்தரவாதம். ஒருபுறம் நாட்டில் கோவில்கள் கட்டப்பட்டு வருவதுடன், கோடிக்கணக்கான ஏழைகளுக்கு நிரந்தர வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. அனைவரின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் நாடு முன்னேறி வருகிறது." எனப் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கி வருகிறது. 2001 முதல் 2014 வரை மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். அதன் பிறகும், அங்கு பாஜகவே தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் குஜராத்தின் 26 எம்.பி தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் குஜராத்தை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தோடு பாஜக அங்கு பணியாற்றி வருகிறது.












Click it and Unblock the Notifications