நேருவை கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறிய கட்டுரைக்கு காங்கிரஸ் கண்டனம்
கேரள ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழ் 'கேசரி'. இதில் பி.கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை தற்போது மலையாள கரையோரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலகிருஷ்ணன் சமீபத்தில் முடிந்த மக்களவை தேர்தலில் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
அந்த கட்டுரையின் முக்கிய வரிகள் இவைதான்: வரலாற்றை கொஞ்சம் நியாயமான மனதுடன் திரும்பி பார்த்தால், இந்தியா பிரிவினைக்கு உள்ளானதையும், கோட்சே குறித்தும் தெளிவான முடிவுக்கு வர முடியும். அப்போது, கோட்சே தவறான மனிதரை தேர்ந்தெடுத்துவிட்டார் என்ற முடிவுக்கும் மக்கள் வருவார்கள்.
காந்திக்கு எதிராக அத்தனை சதிகளையும் செய்தது ஜவகர்லால் நேருதான். நேருவை பொறுத்தளவில் காந்தியின் கதரும், அவர் அணிந்திருந்த தொப்பியும் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்பட்டதே தவிர காந்தி தேவைப்படவில்லை.
இந்த தேசம் கண்ட மிக மோசமான சோகங்களுக்கு நேருதான் காரண கர்த்தாவாக இருந்தார். இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதற்கும், காந்தி கொலைக்கும் நேருவின் சுய நலமே காரணம். கோட்சே நெஞ்சில்தான் சுட்டார். ஆனால் நேருவோ காந்தியின் முதுகில் குத்தினார். உண்மையில், கோட்சே நேருவைதான் சுட்டிருக்க வேண்டும். இவ்வாறு போகிறது அந்த கட்டுரை.
இதனிடையே ஜவஹர்லால் நேரு குறித்த கட்டுரைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இதுகுறித்து கூறியதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆதரிப்பவர்கள் ஆட்சியில் இருந்து வேதனை அளிக்கும் விஷயம். பிரதமர் மோடியும், சங் பரிவார் அமைப்புகளும் இந்த கட்டுரையில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற கட்டுரை மோசமான அரசியலுக்கான அச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.