தைரியமிருந்தால் கர்நாடக அரசை கலைக்க வேண்டியதுதானே? மோடிக்கு காங்கிரஸ் பதிலடி
பெங்களூர்: கர்நாடக அரசு மீது ஊழல் புகார்களை கூறும் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியை கலைக்க வேண்டியதுதானே என காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவிலுள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, '10 சதவீத கமிஷன்' அரசு என குற்றம்சாட்டினார். 10 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டுதான் அரசு பணிகளுக்கு உரிமை வழங்கப்படுவதாக மோடி தனக்கே உரிய பாணியில் கேலி செய்தார்.

மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவோ, கர்நாடகா, 30 சதவீத கமிஷன் மாநிலம் என்று விமர்சனம் செய்தார்.
இதனால் கோபமடைந்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா 100 சதவீதம் கமிஷன் வாங்க கூடியவர். அவரிடம் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும் என டுவிட்டரில் பதிலடி கொடுத்தார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உக்ரப்பா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஊழல் புகாரின்பேரில், அரசியலமைப்பின், 356வது பிரிவின்கீழ், கர்நாடக அரசை மத்திய அரசு கலைக்கலாமே? ஏன் அதை மத்திய அரசு செய்யவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டியதுதானே என உக்ரப்பா கேள்வி எழுப்பினார்.
பாஜக இல்லாத பாரதம் என்பது ராஜஸ்தானில் தொடங்கிவிட்டது. நான் பாஜக இல்லாத இந்தியா வேண்டும் என கூறவில்லை. மோடி இல்லாத இந்தியா தேவை. இவ்வாறு உக்ரப்பா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications