ரூபாய் நோட்டு விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் - காங்கிரஸ்
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால் நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின.
இந்த நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. மக்களவையில் நாளை இதுகுறித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. விவாதத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.