காங்கிரஸை பாஜகவால் தடுக்க முடியாது.. ராஜஸ்தானில் மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் - ஒவைசி ஓபன் டாக்
ஜெய்பூர்: காங்கிரஸ் கட்சியால் பாரதிய ஜனதா கட்சியை தடுத்து நிறுத்த முடியும் என்று தனக்கு நம்பிக்கையில்லை என ஐதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆளும் அசோக் கெஹ்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் 2023 ஆம் ஆண்டு நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து அம்மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி அறிவித்தார்.

ராஜஸ்தான் தேர்தலில் ஒவைசி கட்சி
இதற்கான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கப்போவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு ஜமீல் கான் என்ற கல்வியாளர் தலைமையில் மஜ்லிஸ் கட்சியின் 6 பேர் அடங்கிய மாநிலக் குழுவை நேற்று ஒவைசி அறிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் தனது தேர்தல் வியூகங்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அசதுத்தீன் ஒவைசி பேட்டியளித்தார்.

காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை
அதில், "ராஜஸ்தானில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவேன் என்பதை தேர்தலுக்கு சில காலம் முன்பாக அறிவிப்பேன். இன்னும் ஓரிரு மாதங்களில் கட்சி குழுவை நெறிப்படுத்திவிடுவோம். இங்கு பாஜகவை காங்கிரஸ் தடுத்து நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை. மக்களுக்கு எதிரான ஆட்சியும், தவறான நிர்வாகமுமே இருந்து வருகிறது. கரோலியில் நிகழ்ந்த வன்முறையே இதற்கு ஒரு உதாரணம்.

முஸ்லிம்களின் அரசியல்
ஆல்வாரில் கோயில்கள் இடிக்கப்பட்டது பாஜகவுக்கு அரசியல் ரீதியாக ராஜஸ்தானில் பிடிமானத்தை கொடுத்து இருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கு என்று அரசியல் தலைமை ஒன்றை வைத்து இருப்பது அவசியமான ஒன்று. அப்படி செய்தால் நாட்டில் வகுப்புவாத வன்முறைகள் குறையும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும். சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் ஆட்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஆனால் இங்கோ சமூகத்தின் ஒரு பிரிவை புறக்கணித்து, அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் உள்ளார்கள்.

ராஜஸ்தானில் அரசியல் வெற்றிடம்
கல்வி, சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் இல்லாமல் உள்ளது. அரசியல் ரீதியிலான தலைமையின் தேவை அதிகம் உள்ளது. காங்கிரஸ், பாஜக அல்லாத அரசியல் கட்சிகளுக்கான தேவையும், இடமும் ராஜஸ்தானில் உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். அவர்களை வாக்கு வங்கிகள் என்று சொல்லி தவறாக வழிநடத்துகிறார்கள். அன்று முஸ்லிம்கள் நினைத்தால் அரசுகளை மாற்றமுடியும். ஆனால், இன்று எதுவும் செய்ய முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications