திமுகவை கவிழ்த்தது போல அதிகமான இடங்களில் போட்டியிட்டு சமாஜ்வாதியை காலி செய்த 'ராகுல்' காங்.
அதிகமான இடங்களில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் திமுகவை கவிழ்த்ததைப் போலவே தற்போது உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களில் போட்டியிட்டு சமாஜ்வாதியை காலி செய்துவிட்டது காங்கிரஸ்.
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வெல்லப் போவதில்லை என தெரிந்தும் அதிகமான இடங்களில் அடம்பிடித்து போட்டியிட்டு சமாஜ்வாதி கட்சியை கவிழ்த்துவிட்டது காங்கிரஸ்.
2016 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அடம்பிடித்து 41 இடங்களை வாங்கியது காங்கிரஸ். தமிழகத்தில் காங்கிரஸுக்கு செல்வாக்கே இல்லை என தெரிந்தும் திமுகவிடம் 41 இடங்களை அடம்பிடித்து வாங்கியது காங்கிரஸ்.
பரிதாப திமுக
ஆனால் வெறும் 8 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் போட்டியிட்ட 41 இடங்களில் பல தொகுதிகளில் திமுக எளிதாக வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் காங்கிரஸின் நெருக்கடிக்கு பணிந்ததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பறிகொடுத்தது திமுக.
சமாஜ்வாதி
இதே நிலைமைதான் தற்போது உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் செல்லாக்காசாகிவிட்டது காங்கிரஸ். சமாஜ்வாதி கட்சியோ அப்பா மகன் சண்டையால் அல்லோகலப்பட்டது. இதனை பயன்படுத்தி சமாஜ்வாதி கட்சியின் முதுகில் ஏறிக் கொண்டது காங்கிரஸ்.
|
101 இடங்களில் காங்.
அதுவும் 101 இடங்களை அடம்பிடித்து கேட்டு வாங்கி போட்டியிட்டது காங்கிரஸ். ஆனால் தமிழகத்தைப் போல வென்றது என்னவோ 13 இடங்கள்தான். எஞ்சிய இடங்களில் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவிய பல இடங்களில் சமாஜ்வாதி கட்சி வெல்லும் வலிமை கொண்டவையும் கூட.
|
மாநில கட்சிகள் உணரட்டும்
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததால் பரிதாபகரமான தோல்வியைத் தழுவிவிட்டது சமாஜ்வாதி கட்சி. இதனால் பாரதிய ஜனதா கட்சி வரலாறு காணாத விஸ்வரூப வெற்றியை அள்ளிச் சென்றுவிட்டது. காங்கிரஸுடன் கை கோர்த்தால் மரண அடிதான் விழும் என்பதை மாநில கட்சிகள் பட்டுத்தான் திருந்த வேண்டும் போல.