எதுக்கும் கவலைப்படாதீங்க.. பாக். அத்துமீறலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் பேசி ராகுல் காந்தி ஆறுதல்
காஷ்மீர்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பூஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்ற அவர் மாணவர்களுடன் சிறிது நேரம் பேசி எதற்கும் கவலைப்படாதீங்க என்று கூறினார். ராகுல் காந்தி பயணத்தை முன்னிட்டு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பூஞ்ச் மாவட்டம் சென்ற ராகுல் காந்தி, பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆபரஷேன் சிந்தூருக்கு பின் முதல் முறையாக காஷ்மீருக்கு ராகுல் காந்தி இன்று சென்றார். இதனால் காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
பூஞ்ச் பகுதியில் பள்ளி மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலால், இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் பலரும் அச்சமடைந்துள்ளனர். இனி எதற்கும் கவலைப்படாதீங்க.. நன்றாக படியுங்கள்.. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள்.. என்று கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த மாதம் 25 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் உமர் அப்துல்லாவையும் சந்தித்து பேசியிருந்தார்.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான், இந்தியா மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அடாவடி செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது. ஷெல் மற்றும் சிறிய பீரங்கிகள் மூலமாகவும் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா கொடுத்த அதிரடி தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.
இதையடுத்து தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தியாவை சீண்டும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாகிஸ்தான் தலைவர்களும் அமைச்சர்களும் பேசி வருவது இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை முழுமையாக தணிய விடாமல் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications