1,68,099 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என பேனர் வைத்த அதிமுக - தேர்தல் ஆணையத்தில் புகார்
டெல்லி: காஞ்சிபுரத்தில், வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று பிளக்ஸ் பேனர்களை அதிமுகவினர் வைத்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் கொடுத்துள்ளது.
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் செல்வம், மதிமுக சார்பில் மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பில் விஸ்வநாதன் எம்.பி. ஆகியோர் தேர்தலில் களம் இறங்கினர். இங்கு பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்புக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை வரும் மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான கே. பரிமளம் சார்பில் காஞ்சிபுரத்தின் பிரதான சாலையான காந்திசாலை வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே 4 பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று அந்த பிளக்ஸ் பேனர்களில் வாழ்த்து செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒரு பேனரில் ''40 எம்.பி.யையும் பெற்றோம்'' என்ற வாக்கியமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிளக்ஸ் பேனர்களால் காஞ்சிபுரத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை உடனடியாக காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் பார்த்து புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அகற்றி விட்டனர். இந்த நிலையில் இதுதொடர்பாக காஞ்சிபுரத்தின் தற்போதைய எம்பியும் காங்கிரஸ் வேட்பாளருமான பெ.விஸ்வநாதன் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி சம்பத்தை நேற்று இரவு சந்திந்து புகார் கொடுத்துள்ளார்.
அதில் பேனர்வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். வாக்கு வித்தியாசத்தை துல்லியமாக போட்டு அதிமுகவினர் பேனர் வைத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications