ஒரே சிரிப்பு தான்..விரைவில் டும்டும்டும்! காங்கிரஸ் ராகுல் காந்திக்கு கல்யாணம்.. எப்போது தெரியுமா?
லக்னோ: நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் ரேபரேலியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் நான்காம் கட்ட தேர்தல் ஆனது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இன்னும் மூன்று கட்ட தேர்தல்கள் இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. அதற்கு பிறகாக ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கான விடை கொடுக்கப்படும்.
ஆளுங்கட்சியான பாஜகவை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்றி விட வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக செயலாற்றி வருகிறது. பல்வேறு மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கிறது. குறிப்பாக அந்த கட்சியின் ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது வயநாடு தொகுதி எம்பி ஆக இருக்கும் அவர் ரேபரேலி தொகுதியில் களமிறங்குகிறார்.
கடந்த மே 3ஆம் தேதி ராகுல் காந்தி ரேபரேலியிலும் கேஎல் சர்மா அமேதியிலும் வேட்பாளராக களமிறங்குவார்கள் என அறிவித்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தற்போது போட்டியிடவில்லை. ராகுல் காந்தி 2004 முதல் 2019 வரை அமேதி தொகுதியில் இருந்து தான் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவரும் பாஜகவில் மூன்று முறை எம்.எல்.சியாக இருக்கும் தினேஷ் பிரதாப் சிங்கை சந்திக்கிறார்.
ஐந்தாவது கட்டமாக ரேபரேலி தொகுதியில் மே இருபதாம் தேதி தேர்தல் நடக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அந்த தொகுதியில் 5,34,918 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தினேஷ் பிரதாப் சிங் 3,67,740 வாக்குகளை பெற்று பெரும் சவால் அளித்தார். இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி முதன்முறையாக ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
பிற வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டாலும் தனக்காக ரேபரேலியில் முதன்முறையாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் இந்நிலையில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது உங்களுக்கு எப்போது திருமணம் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் நிச்சயம் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.












Click it and Unblock the Notifications