சு.சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்குவதா? வெங்கையா நாயுடு வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்கியதைக் கண்டித்து டெல்லியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வீட்டை இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசில் எந்த ஒரு பதவியும் வகித்தாவர் சுப்பிரமணியன் சுவாமி. அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்து வருகிறது மத்திய அரசு. அத்துடன் திடீரென அவருக்கு அரசு பங்களா ஒன்றையும் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியும் வகிக்காத சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களாவை ஒதுக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக நேஷனல் ஹெரால்டு வழக்கின் சொத்துகளை அபகரித்ததாக வழக்கு தொடர்ந்ததாலேயே சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்கியதைக் கண்டித்து டெல்லியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவின் வீட்டின் முன்பாக இளைஞர் காங்கிரசார் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தின் போது சுப்பிரமணியன் சுவாமியின் உருவபடங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மேலும் இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டபோது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டு பதற்றமும் நிலவியது.












Click it and Unblock the Notifications