மன்மோகனை குற்றம் சாட்டும் ப.சிதம்பரத்தின் புகாரை ஏற்க முடியாது: காங்கிரஸ்
டெல்லி: 2ஜி விவகாரத்தில் பிரதமர் பதவியை மன்மோகன் சிங் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரம் அளித்த ஒரு பேட்டியில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்க ஆ.ராசாவை மன்மோகன் சிங் அனுமதித்திருக்கக் கூடாது. 2ஜி ஊழல் செய்தி வெளியானதும் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும். அவரும் பதவி விலகியிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் மீது ப.சிதம்பரம் சுமத்திய குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்றே கருதுகிறேன். முன்னாள் மத்திய அமைச்சரவை ஒரு குழுவாகவே இயங்கியது.
இந்த யோசனை சிதம்பரத்திற்கு அப்போதே இருந்திருந்தால் மத்திய அமைச்சரவையிடம் தெரிவித்திருக்கலாம். எடுத்த முடிவுகளுக்கு முன்னாள் பிரதமரை மட்டுமே பொறுப்பாக்க முடியாது.
காங்கிரஸ் அரசாங்கத்தை பொறுத்தவரை பிரதமர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் இப்போது கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை என்றார் சாக்கோ.












Click it and Unblock the Notifications