தீவிர அரசியலில் குதிக்கிறார் பிரியங்கா.. உ.பி. முதல்வர் வேட்பாளராகிறார்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், அவர் உத்திரப்பிரதேச முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தம்பதியின் மகள் பிரியங்கா காந்தி. அவ்வப்போது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட போதும், திவிர அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார் அவர்.

முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திராகாந்தியைப் போன்றே ஆடை அணிந்து, மக்களைக் கவரும் தோற்றத்துடன் வளைய வரும் அவருக்கு கட்சியில் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதனால், அவரைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, உத்திரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாம்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பிலோ அல்லது கூட்டணி சார்பிலோ பிரியங்கா போட்டியிடலாம் என கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேசுக்கு எதிராக பிரபலமான, வலிமையான ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த உத்திரப்பிரதேச காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே, லோக்சபா தேர்தலின் போது பிரியங்காவின் பிரசாரம் பெரும் வரவேற்பை பெற்றதால் அவரை உத்திரப்பிரதேச காங்கிரசில் வேட்பாளராக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறதாம்.
ஆனால் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீதான நில மோசடிப் புகார்கள் இந்த விவகாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், எனவே இந்த விவகாரம் குறித்து சோனியாவும், ராகுலும் தெளிவான முடிவு எடுக்காமல் தாமதித்து வருவதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications