தேர்தல் சுனாமியில் காங்கிரஸ் காணாமல் போய்விடும்: நரேந்திர மோடி உறுதி
பெங்களூர்: வரவிருக்கும் லோக்சபா தேர்தல் எனும் சுனாமியில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும் எனத் தெரிவித்துள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி முக்கியத் தலைவர்கள் நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் குல்பர்காவில் நேற்று முந்தினம் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் அரசு...
லோக்பால் ஆய்வுக்குழுவில் பணியாற்ற மூத்த வக்கீல் பாலி நாரிமனுக்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்க மறுத்து உள்ளதாக பத்திரிகைகளை பார்த்து அறிந்து கொண்டேன். இதன்மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் அரசு என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

பிரித்தாளும் அரசியல்...
காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் அரசியல் நடத்தி வருகிறது. அவர்கள் நாட்டு மக்களை மோதவிட்டுவிட்டு டெல்லியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாடு, மாநிலங்கள் மட்டுமின்றி மக்களின் இதயங்களை அவர்கள் உடைக்கிறார்கள்.

முக்கியப்பணி...
நாட்டு மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கான காரணம் காங்கிரஸ் தான் என்று அறிந்து கொண்டார்கள். நாட்டில் உள்ள ஏழை மக்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் முக்கிய பணி காங்கிரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதுதான்.

மத்திய அரசின் புறக்கணிப்பு...
ஆந்திராவில் சீமாந்திரா பகுதியால் தங்களுக்கு எந்தவொரு லாபமும் இல்லை என்று கருதி அந்த பகுதியை மத்திய அரசு புறக்கணித்து விட்டது. சீமாந்திராவும் நாட்டின் ஒரு பகுதி தான். ஆனால், அதை மத்திய அரசு ஆதரவற்றதாக்கி விட்டது.

ஓட்டு வங்கியை அதிகரிக்க...
தெலுங்கானாவை உருவாக்க நூற்றுக்கணக்கானவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்து உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்காக அல்ல. பிளவுகளை ஏற்படுத்தி அதன்மூலம் ஓட்டு வங்கியை அதிகரித்துக் கொள்ள காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

காங்கிரஸ் மோசமான டாக்டர்....
எங்களுக்கு தெலுங்கானா, சீமாந்திரா இரண்டு பகுதியும் தேவை. ஆனால், குழந்தை(தெலுங்கானா) பிறக்கும்போது தாயை(சீமாந்திரா) கொல்லும் டாக்டராக காங்கிரஸ் விளங்குகிறது.

தேர்தல் சுனாமி...
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே காங்கிரசுக்கு எதிரான சூறாவளி உருவாகி இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இந்த சூறாவளி சுனாமியாக மாறிவிடும். அந்த சுனாமியில் சிக்கி காங்கிரஸ் காணாமல்போய்விடும்.

ஜனநாயகத்தின் பேரில்....
காங்கிரசால் தான் தாங்கள் பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறோம் என்று பொதுமக்கள் புரிந்து கொண்டனர். நாட்டையே காங்கிரஸ் பாழடித்து விட்டது. இதனால் இனிமேலும் அவர்களை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.ஜனநாயகம் என்ற பெயரில் மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது.

சாதனைகளைப் பட்டியலிடுங்கள்....
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகள் என்ன? கடந்த 10 நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இங்கு வந்தார். அப்போது அவர் காங்கிரஸ் அரசின் சாதனைகள் குறித்து பேசினாரா? இதுதான் ஜனநாயகமா? ஜனநாயகம் உண்மையிலேயே இருந்தது என்றால் ஒவ்வொரு நிமிடத்துக்கும், ஒவ்வொரு பைசாவுக்கும் மக்கள் பிரதிநிதிகள் கணக்கு தெரிவிக்க வேண்டும்.

நம்ப வேண்டாம்...
பண வீக்கத்தை 100 நாட்களில் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கூறியது. அதை செய்ததா? காங்கிரஸ் மற்றும் அந்த கட்சி தலைவர்களின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம். இங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதே உற்சாகத்துடன் தேர்தலில் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அதிக இடங்களில் வெற்றி பெற செய்து புதிய வரலாறு படைக்க செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications