கேதார்நாத் கோவிலில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு- வெடித்தது சர்ச்சை!
Recommended Video
ரிஷிகேஷ்: கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. அனைவரும் வழிபடும் கோவிலில் பிரதமர் மோடிக்கு மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பு ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடியின் அண்மைய பேச்சுகள், பேட்டிகள் அனைத்துமே சர்ச்சையாகிவிட்டது. நியூஸ் நேசன் டிவிக்கு அளித்த பேட்டியில் 1980களில் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தினேன்; இ மெயில் அனுப்பினேன் என பிரதமர் மோடி அளித்த பேட்டி கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறேன் என கூறி அமித்ஷாவை மட்டும் பேசவிட்டு அமைதியாக மோடி அமர்ந்ததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேதார்நாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார்.
இயற்கையின் பேரழிவில் இருந்து மீண்டு இருக்கும் கேதார்நாத்துக்கு யாத்திரை செல்வது இந்துக்களின் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனிடையே கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.

மூத்த பத்திரிகையாளர் ரோகினி சிங் தமது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து பக்தர்களுக்கும் கேதார்நாத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்குமா? அல்லது ஒருசில 'சிறப்பு' பக்தர்களுக்கு மட்டும்தான் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஏதோ சாம்ராஜ்யத்தின் மாமன்னரைப் போல உடை அணிந்து கொண்டு மோடி செல்வது எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது என்கிற விமர்சனங்களும் நெட்டிசன்களால் முன்வைக்கப்படுகின்றன.

மற்றொரு பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதியும் தமது ட்விட்டர் பக்கத்தில், கடவுள் முன் அனைவரும் சமம் இல்லையா? இந்த சிவப்பு கம்பளம் கடவுளுக்கா? என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆதரவாளரான சுமந்த் சி. ராமனும் கூட மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுவதை விமர்சித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த பஞ்சாயத்துதான் இப்போது ஹாட் டாபிக்!












Click it and Unblock the Notifications