மல்லையா கட்டிய இடுப்புத் துண்டு முதல் பங்களா வரை.. ஒரு தரம்.. 2 தரம்.. 3 தரம்!
மும்பை: விஜய் மல்லையா போய் விட்டார். இப்போது எதை ஏலம் விடலாம். எப்படி பணத்தைத் திரும்ப வசூலிக்கலாம் என்று மண்டை காய்ந்து கிடக்கின்றன கடன் கொடுத்த வங்கிகள். தற்போது மல்லையா பயன்படுத்திய ரூ. 700 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏலம் விடவுள்ளனராம்.
அவர் கட்டியிருந்த இடுப்புத் துண்டு முதல் மிகப் பெரிய கிங்பிஷர் வில்லா வீடு வரை பல பொருட்களும் ஏலத்திற்கு வரவுள்ளன.
இந்த ஏலத்தை வங்கிகளும், மத்திய அரசின் சேவை வரித்துறையும் இணைந்து நடத்தவுள்ளன. இதில் எத்தனை கோடி தேறும் என்பது தெரியவில்லை.

என்னென்ன பொருட்கள்
மும்பை விமான நிலையம் அருகே உள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமையக கட்டடமான கிங்பிஷர் ஹவுஸ், மல்லையாவின் கார்கள், அலுவலக பர்னிச்சர்கள். மல்லையாவின் தனி விமானம், அவரது பங்களாவில் உள்ள சோபாக்கள், பாத்ரூமில் பயன்படுத்தும் டிரஸ், துண்டுகள், கோவாவில் உள்ள கிங்பிஷர் வில்லா ஆகியவை ஏலத்திற்கு வருகின்றனவாம்.

டிரேட்மார்க்குகளும் ஏலம்
அதேபோல மல்லையா வைத்திருந்த பல்வேறு டிரேட் மார்க் உரிமைகள், பிராண்டுகளின் பெயர்களையும் ஏலத்தில் விடவுள்ளனராம்.

கிங்பிஷர் லோகோவும் ஏலம்
முக்கியமாக கிங்பிஷர் நிறுவனத்தின் லோகோவையும் ஏலம் விடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை யாரேனும் ஏலம் எடுத்தால் இனிமேல் அது மல்லையாவுக்குச் சொந்தமானதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

2வது முயற்சி
ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் சில பொருட்களையும், சொத்துக்களையும் ஏலம் விட முயற்சி நடந்தது. ஆனால் யாருமே வரவில்லை. இதனால் அது தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது 2வது முயற்சியாக இந்த ஏலத்தை அறிவித்துள்ளனர்.

சேவை வரித்துறைக்கு விமானம்
மல்லையாவின் தனி விமானத்தை சேவை வரித்துறை ஏலத்தில் விடுகிறது. மற்ற பொருட்களை வங்கிகளும் கடன் கொடுத்த நிறுவனங்களும் ஏலத்தில் விடவுள்ளன.

ரூ. 9000 கோடி கடன்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ. 9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிய மல்லையா அதைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குப் போய் விட்டது நினைவிருக்கலாம்.

ஆகஸ்ட் 4
இந்த ஏலமானது ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள கிங்பிஷர் ஹவுஸில் வைத்து ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications