நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: டென்சனில் காத்திருக்கும் கட்சிகள்!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். காலை 11 மணிக்கே முடிவுகள் தெரிந்துவிடும்.

9 கட்ட தேர்தல்
16வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 7ம்தேதி தொடங்கி மே 12ம்தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதிலுமுள்ள 543 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் சுமார் 8,000 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதன்முறையாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்யவும் நோட்டா வாய்ப்பும் இந்தமுறை அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவின்போது ஒரு சில சம்பவங்களை தவிர்த்து மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கேரளாவில் வாக்குப்பதிவு
முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்றது. அசாமிலுள்ள 5 தொகுதிகள் மற்றும் திரிபுராவின் ஒரு தொகுதி என அன்று மொத்தம் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. ஏப்ரல் 9ம்தேதி நடந்த 2ம் கட்ட தேர்தலில், மொத்தம், 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. ஏப்ரல் 10ம் தேதி நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில், அந்தமான் நிகோபார், சண்டீகர், சட்டீஸ்கர், லட்சத்தீவு ஆகிய தலா 1 தொகுதிகள், கேரள மாநிலத்தின் மொத்தமுள்ள 20 தொகுதிகள், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10, பிகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களின் சில தொகுதிகள் என மொத்தம் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

121 தொகுதிகள்
12ம் தேதி நடந்த 4ம் கட்ட தேர்தலில் அசாமில் 3, கோவாவில் 2, சிக்கிம், திரிபுராவில் தலா 1 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 17ம்தேதி நடைபெற்ற 5ம் கட்ட தேர்தலில் பிகார், சட்டீஸ்கர், ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகள், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலுள்ள 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி..
ஏப்ரல் 24ம் தேதி நடைபெற்ற 6ம் கட்ட தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி, அசாம், பிகார், சட்டீஸ்கர், ஜம்முகாஷ்மீர், மத்திய பிரதேசம்,, உ.பி, மே.வங்கம் உட்பட்ட மாநிலங்களிலுள்ள 117 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

தெலுங்கானா
ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்ற 7ம் கட்ட வாக்குப்பதிவில் ஆந்திர மாநிலம் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள 17 தொகுதிகள், குஜராத்தின் 26 தொகுதிகள் உட்பட மொத்தம் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

சீமாந்திரா
மே 7ம் தேதி நடைபெற்ற 8ம் கட்ட வாக்குப்பதிவில் ஆந்திராவின் சீமாந்திரா பிராந்தியத்திலுள்ள 25 தொகுதிகள், உத்தரபிரதேசத்தின் 15 தொகுதிகள் உட்பட 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போதே ஒடிசா மற்றும் ஆந்திராவின் சீமாந்திரா, தெலுங்கானா பிராந்தியங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவும், தமிழகத்தின் ஆலந்தூர் உட்பட சில சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.

எக்சிட் போல்கள்...
12ம் தேதி நடந்த 9ம் மற்றும் இறுதிகட்ட தேர்தலின்போது மோடியும், அரவிந்த் கேஜ்ரிவாலும் நேரடியாக போட்டியிட்ட வாரணாசி உட்பட 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற எக்சிட் போல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணியைவிட மூன்றாம் அணி கட்சிகள் அதிக தொகுதிகளை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை
உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு 8.30 மணியளவில் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். மதியத்துக்குள் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும். மாலைக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகாலையே பணி
வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு நாளை அதிகாலை பலத்த பாதுகாப்புடன் அவை கொண்டுவரப்படும். 8 மணிக்குதான் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றாலும், அதற்கான ஆயத்தப் பணிகள் காலை 5 மணிக்கெல்லாம் துவங்கிவிடும்.

989 மையங்கள்
18 லட்சத்து 78 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள 550 மில்லியன் வாக்குகளை, எண்ணுவதற்காக நாடு முழுவதும் 989 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 42 மையங்கள் உள்ளன. சுமார் 10 லட்சம் ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 20 நாடுகளில் இருந்து 50 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயலக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் நாடு முழுவதிலும் ஐந்தரை லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அங்கீகரிக்கப்படாத நபர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு 100 மீட்டருக்கு உள்ளே வர அனுமதி கிடையாது. சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications