மாமனார் மரணம்..மருமகனுக்கு கல்யாணம்! பில்கிஸ் பானு குற்றவாளிகளுக்கு இஷ்டத்திற்கு வழங்கப்படும் பரோல்
காந்திநகர்: நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் மீண்டும் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதில் ஒரு குற்றவாளிக்கு, அவருடைய மருமகனின் திருமணத்தில் பங்கேற்க 10 நாள் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2002ம் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். நல்வாய்ப்பாக பில்கிஸ் பானு உயிர்பிழைத்த நிலையில், அவர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் பேரில், 11 பேரை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கு ஆயுள் தண்டனையையும் வழங்கியது.

ஆனால் தண்டனைக்காலம் முடிவடைவதற்குள் இவர்களை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. விடுதலையானவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுபாஷினி அலி உட்பட மூவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் 11 பேரின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், “பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்” என்றும் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.
இப்படி இருக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார். அதேபோல தற்போது சந்தனா எனும் குற்றவாளி, தனது மருமகனின் திருமணத்திற்காக 10 நாட்கள் பரோலில் வெளியே வந்திருக்கிறார். இவரது பரோல் கோரிக்கையை விசாரித்த நீதிபதி திவ்யேஷ் ஏ ஜோஷியின் தலைமையிலான அமர்வு, பரோலுக்குக்கு அனுமதியளித்தது.
நாட்டையே உலுக்கிய பாலியல் குற்றவாளிகள், தண்டனை காலம் முடிவதற்குள் விடுதலை செய்யப்படுவதும், அவர்களுக்கு எளிதாக பரோல்கள் வழங்கப்படுவதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications