ஒருபோதும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லவே இல்லை: அடித்துச் சொல்கிறார் 'காம்ரேட்' யெச்சூரி!!
கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியுடன் எதிர்காலத்தில் ஒருபோதும் கூட்டணி வைக்கவே மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலராக சீதாராம் யெச்சூரி அண்மையில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஆதரவாக இருந்தனர்.
அதே நேரத்தில் ராமச்சந்திர பிள்ளையை பிரகாஷ் காரத் தரப்பு களமிறக்க முனைந்தது. ஆனால் ஒருமனதாக யெச்சூரியே தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்ற யெச்சூரி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்துத்துவா அஜெண்டா
நரேந்திர மோடி அரசின் இந்துத்துவா செயல்திட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்து போராட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
மோடி அரசானது மக்கள் விரோத அரசு. தாராளமய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. இதனால்தான் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
காங்கிரசுடன் கூட்டணில்லை
காங்கிரஸ் கட்சிக்கும் மார்க்சிஸ் கட்சிக்குமான சித்தாந்தங்கள் வேறுபாடானவை. இதனால் காங்கிரஸுடன் ஒருபோதும் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க மாட்டோம்.
ஜனநாயகம் சீர்குலைவு
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் மக்கள் வாழ்க்கை மிகவும் அபாயகரமாக உள்ளது. ஆளும் சிறுபான்மை மதவாதிகளான திரிணாமுல் மற்றும் பெரும்பான்மை மதவாதிகளான பாரதிய ஜனதாவினருக்கு இடையே மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பயங்கரவாத செயல்கள் தொடர்கின்றன. மக்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை குறைந்து போய்விட்டது.
ஆயுதம் தாங்கிய குண்டர்கள்
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் வாக்களிக்க வந்தனர். ஆனால் ஆயுதம் தாங்கிய அரசியல் குண்டர்களால் அவர்கள் விரட்டப்பட்டனர். இது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப் பெரும் சவால். இம்மாநிலத்தில் அவசரகால சட்டம் நாட்டில் அமலில் இருந்த போது எப்படி இருந்ததோ அதுபோன்ற நிலைமைதான் இருக்கிறது.
இவ்வாறு யெச்சூரி கூறினார்.