மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நன்மையே இல்லை: யெச்சூரி தாக்கு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு கிடைத்த பலன் என்ன? நிச்சயம் உறுதியான நன்மை எதுவும் கிடைக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி சாடியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 நாள் தேசிய மாநாடு, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாளான வரும் 19-ந் தேதி உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மாநாட்டில் கட்சி வெளியிடவுள்ள தீர்மானங்கள் குறித்து சீதாராம் யெச்சூரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்த வரையில், மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு கடைப்பிடித்த அதே கொள்கையைத்தான், தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பின்பற்றி வருகிறது. இதற்கு முன்பிருந்த பிரதமர்களைவிட, மிக அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மோடி மேற்கொள்கிறார்.
இதன் மூலம் நாட்டு நலனுக்கு அவர் கொண்டு வரப் போவது என்ன? இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், உறுதியான நன்மை எதுவும் கிடைக்கப் போவதில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் வெளிநாட்டுக் கொள்கை கவலையளிக்கிறது. ஏனெனில், அவை அமெரிக்க நலன் சார்ந்தவையாக உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நலனுக்கானவை அல்ல.
இவ்வாறு யெச்சூரி கூறினார்.












Click it and Unblock the Notifications