அவர்களே ஜாக்கெட்டை கிழித்துக் கொண்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள்.. சிபிஎம் மீது திரினமூல் புகார்
புர்த்வான்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் அவர்களின் ஜாக்கெட்டை கிழித்துக் கொண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மானபங்கப்படுத்திவிட்டனர் என்பார்கள் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் ஸ்வபன் தேப்நாத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில அமைச்சர் ஸ்வன் தேப்நாத். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான அவர் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள பைதியாபூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் ஆர்வலர்கள் அவர்களின் ஜாக்கெட்டை அவர்களே கிழித்துக் கொண்டு திரிணாமூல் காங்கிரஸார் அவர்களை மானபங்கபடுத்திவிட்டதாக தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். மக்கள் அவர்களின் பேச்சை நம்ப மாட்டார்கள் என்றார்.
கடந்த 1ம் தேதி பைதியாபூர் அருகே உள்ள கல்னாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திரிணாமூல் காங்கிரஸார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது திரிணாமூல் காங்கிரஸார் தங்களை மானப்பங்கப்படுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேப்நாத்தின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா கரத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.