கோவை அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல்... உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
இடிகரை: கோவை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
கோவை அருகே உள்ள ராக்கிபாளையம் வினாயகர் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று இரவு 7 மணிக்கு வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை பார்த்தார். இது குறித்து உடனடியாக அருகில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்து விரைந்து வந்த போலீசார் மேட்டுப்பாளையம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 6 பேர் அடங்கிய ரெயில்வே ஊழியர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் விரிசல் அடைந்த தண்டவாளத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். விரிசல் அடைந்த தண்டவாளத்தின் பகுதியில் உள்ள பக்கவாட்டில் இரும்பு ராடுகளை வைத்து பொருத்தினர். இந்த பணி சுமார் 1 மணிநேரம் நீடித்தது.
இதற்கிடையில் நேற்று மாலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, சீரமைப்பு பணி நடப்பதை அறிந்து, அந்த ரெயில் காரமடையில் நிறுத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தற்காலிகமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்டவுடன் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.
இது குறித்து ரெயில்வே என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:
தொடர் மழை காரணமாக தண்டவாளம் கீழ் பகுதியில் இறங்கி, விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த தண்டவாளத்தை மாற்றுவது உடனே முடியாத காரியம் என்பதால், விரிசல் அடைந்த பகுதியில், ராடுகள் வைத்து பொருத்தப்பட்டு,தற்காலிகமாக ரெயில்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. தொடர்ந்து நிரந்தர சீரமைப்பு பணி இன்று நடக்கிறது. மேலும் உரிய நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, என்றார்.