”ஹரியானா பச்சாவ்” - பரிணிதி சோப்ராவை அம்பாசிடர் ஆக்கி அடித்துக் கொள்ளும் பாஜக!
சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான பெண் குழந்தைகளைப் போற்றும் திட்டத்திற்கு நடிகை பரிணிதி சோப்ராவினை விளம்பரத் தூதுவராக நியமித்து விட்டு சிண்டைப் பிய்த்து மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர் ஹரியானாவின் முதல்வரும், அமைச்சர் ஒருவரும்.
பிரதமரின் கனவு திட்டங்களில் ஒன்று பெண் குழந்தைகளை போற்றும் "பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்" என்று பெயரிடப்பட்ட இத்திட்டம் வட மாநிலங்களில் பரபரப்பாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஹரியானா அரசும் சும்மா இல்லாமல் இதற்காக பாலிவுட்டின் அழகுப் பதுமையான பரிணிதி சோப்ராவினை நியமித்தது.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உடனே டுவிட்டரில், "விளம்பர தூதராக பரிணிதி சோப்ராவை வருக வருக என வரவேற்கிறேன். இவர் மூலம் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றி மக்கள் அறிந்துகொள்வார்கள்'' என்ற "விலைமதிப்பில்லா" கருத்தினை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மனோகர் மீது அம்மாநில சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ்ஜூக்கு ஏற்கனவே ஏதோ புகைச்சல் இருந்து வந்த நிலையில் உடனடியாக பொங்கி எழுந்து விட்டார்.
அவர் முதல்வருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் பதிலாக, "பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் தூதராக பரிணிதி சோப்ரா நியமிக்கப்பட்டது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. யாரும் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை'' என்று முதல்வரை வறுத்தெடுக்காத குறையாக கூறியிருந்தார். இதனையடுத்து முதல்வருக்கு ஆதரவாக சிலரும், அமைச்சருக்கு ஆதரவாக சிலரும் இப்போதே கிளம்ப துவங்கி விட்டனர்.
பிரதமரின் ஆசை திட்டத்திற்கு ஒரு நடிகையை விளம்பரத் தூதராக்கி விழுந்து, விழுந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஹரியானா வாலாக்கள்.












Click it and Unblock the Notifications