அதிகரிக்கும் சடலங்கள்.. இனி மயானத்தில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களே.. குஜராத் அரசு உத்தரவு
காந்தி நகர்: குஜராத் அரசு அம்மாநிலத்தில் மயானத்தில் பணிபுரிபவர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்துள்ள நிலையில், இனி அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
நாட்டில் கொரோனா பாதிப்பின் விகிதம் தினசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3.62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 4,120 பேர் மரணமடைந்துள்ளனர்.

மயானத்தில் காத்திருப்பு
இதன் காரணமாக நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா சடலங்களைப் புதைக்கப் பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைக்கவும் எரிக்கவும் வேண்டியுள்ளதால் இது மாயனத்தில் உள்ளவர்களுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்களப் பணியாளர்கள்
இந்நிலையில், மயானத்தில் பணிபுரிபவர்களும் இனி முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் எனக் குஜராத் அரசு அறிவித்துள்ளது. அதன்படி மயானத்தில் பணிபுரிபவர்கள் இனி கொரோனா காரணமாக உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நதிகளில் சடலங்கள்
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னாள் தான் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை நதியில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதேபோல யமுனை நதியிலும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இவை கொரோனா சடலங்களாக இருக்கலாம் என்றும் உயிரிழந்தவர்களை எரியூட்டப் பல மணி நேரங்கள் வரை ஆவதால், உறவினர்கள் இப்படி நதியில் வீசியிருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

மறைக்கப்படும் மரணங்கள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதை இந்தச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நாட்டிலுள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் பல மரணங்கள் கொரோனா இல்லாத மரணங்களாக மறைக்கப்படுவதாக இந்திய மருத்துவ சங்கமும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications