ம.பியில் நாளை இடைத்தேர்தல்: பா.ஜ.க. முதல்வர் சவுகானின் இடஒதுக்கீடு ஆதரவு பேச்சு கை கொடுக்குமா?
போபால்: பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடஒதுக்கீட்டு விவகாரத்தால் பீகாரில் படுதோல்வியை சந்தித்தது போல இங்கேயும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பேசியது பா.ஜ.க.வுக்கு கை கொடுக்குமா என்பது 24-ந் தேதி தெரிந்துவிடும்.
பீகார் மாநிலத்தில் ரட்லம்- ஜபூவா லோக்சபா தொகுதிக்கும் தேவாஸ் சட்டசபை தொகுதிக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் 24-ந் தேதி எண்ணப்படுகின்றன.

ரட்லம் லோக்சபா தொகுதி
ரட்லம் லோக்சபா தொகுதியானது நீண்டகாலம் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் திலீப் சிங் பூரியா வெற்றி பெற்றார். இதே திலீப் சிங் பூரியா 1980ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இத்தொகுதியில் 5 முறை வென்றவர். லோக்சபா தேர்தலின் போது மோடி அலையால் பா.ஜ.க.வுக்கு தாவியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அவர் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ரட்லம் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் காங்கிரஸ் முனைப்பாக இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியாவை தற்போது வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் பா.ஜ.க.வோ திலீப்சிங் மகளும் எம்.எல்.ஏ.வுமான நிர்மலா பூரியாவை நிறுத்தி அனுதாப வாக்குகளை அறுவடை செய்ய காத்திருக்கிறது.

தேவாஸ் சட்டசபை தொகுதி
இதேபோல் தேவாஸ் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாக இருந்த "தேவாஸ்" மன்னர் பரம்பரையைச் சேர்ந்த துகோஜி ராவ் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு துகோஜி ராவ் மனைவி காய்த்ரி ராஜேவை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இத்தொகுதியிலும் அனுதாப வாக்குகளுக்காக காத்திருக்கிறது பா.ஜ.க.

முதல்வரின் 'உஷார்' பேச்சு
பீகார் தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய பேச்சால்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததாக அக்கட்சியினரே குற்றம்சாட்டி வருகின்றனர். இது ம.பி.யிலும் எதிரொலித்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வரான பா.ஜ.கவின் சிவராஜ்சிங் சவுகானோ, பிரதமராக மோடி இருக்கும் வரை, முதல்வராக நான் இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ஒழித்துவிட முடியாது என எச்சரிக்கையுடன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

நம்பிக்கையோடு காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் பாரம்பரிய வாக்குகளை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. 2 தொகுதிகளிலும் நிச்சயம் வெல்வோம் என்கிறார் ம.பி. முன்னாள் முதல்வரான காங். மூத்த தலைவரான திக்விஜய் சிங்.
இந்த 2 கட்சிகள் அல்லாமல் ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், கோண்டுவானா கதந்திரா கட்சி, பகுஜன் சங்கராஷ் தள் என்ற மெகா கூட்டணியும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications