மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்கள் குறி.. ஜம்முவில் ஐஇடி குண்டுகள் கண்டெடுப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
ஸ்ரீநகர்: ஜம்மு விமானப் படைத் தளத்தில் டிரோன் மூலம் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், அப்பகுதியில் சுமார் 6 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது. இந்தியா எல்லைக்குட்பட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அத்துமீறித் தாக்குதல் நடத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டுகூடக் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ராணுவத்தின் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலை யாரும் மறந்துவிட முடியாது,
ஜம்மு விமான படைதளம்: ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்து டிரோன் தாக்குதல்? முதல் கட்ட விசாரணையில் தகவல்
டிரோன் தாக்குதல்
இந்த சூழலில் இன்று காலை ஜம்மு பகுதியில் உள்ள ராணுவத்திற்குச் சொந்தமான விமானப் படைத் தளத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இருப்பினும், இவை சக்தி குறைந்த குண்டுகள் என்பதால் இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருவர் மட்டும் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தானில் இருந்த இந்த டிரோன்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
வெடிகுண்டு
இந்நிலையில், சம்பவம் நடந்த அப்பகுதியில் சுமார் 6 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஜம்மு காஷ்மீர் போலீஸ் தலைவர் தில்பாக் சிங் கூறுகையில், "ஜம்மு பகுதியில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரணை செய்து வருகிறோம்.
போலீசார் தகவல்
டிரோன் தாக்குதல் நடந்த இடத்தில் 6 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது பயங்கர சேதத்தை ஏற்படுத்தக் கூடிய IED வகையைச் சேர்ந்தது. லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்" என்றார்.
முதல் டிரோன் தாக்குதல்
கடந்த சில மாதங்களாகவே அமைதியான சூழ்நிலை நிலவி வந்த காஷ்மீர் பகுதியில் இன்று அடுத்தடுத்த நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இதற்கு முன்பும்கூட பல முறை தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் டிரோன்களை மூலம் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் அங்குப் பாதுகாப்பு நடைமுறைகளை மீற்ற வேண்டியுள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்,