சாம்பியன்ஸ் டிராபியில் தோல்வி: டிவிகளை உடைத்து ரசிகர்கள் ஆவேசம்- கோஹ்லியின் கொடும்பாவி எரிப்பு!
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து டெல்லி, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்கள் டிவிகளை சாலையில் போட்டு உடைத்தனர்.
டெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்த நிலையில் டெல்லி, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்கள் டிவிகளை சாலையில் போட்டு உடைத்தனர். மேலும் கிரிக்கெட் வீரர்களின் படங்களையும் எரித்தனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரு அணிகளும் மோதியதால் எதிர்பார்ப்பு இருந்தது.

பாக். ரன்கள் குவிப்பு
டாஸில் இந்தியா வெற்றி பெற்றாலும் முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தானை இந்தியா அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் மிக பிரமாதமாக விளையாடி 338 ரன்களை வாரி குவித்தது.

படுதோல்வி
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களத்தில் இறங்கியது. பீல்டிங், பேட்டிங் ஆகியவற்றில் சொதப்பிய இந்திய அணி, படுகேவலமாக ஆடி 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது.

டிவி பெட்டிகள் உடைப்பு
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ரசிகர்கள், டெல்லி, கான்பூர், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் டிவி பெட்டிகளை உடைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் கோஹ்லி, டோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் உருவப்படங்களை எரித்தனர். இதனால் கோஹ்லி, டோணி, ரோஹித் சர்மா ஆகியோரது வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில்..
லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியுற்ற நிலையில் பாகிஸ்தானில் ஏராளமான டிவி பெட்டிகள் உடைந்தன. இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் மேலும் எத்தனை டிவி பெட்டிகள் உடையுமோ என்றிருந்த நிலையில் இந்திய ரசிகர்கள் தங்கள் டிவி பெட்டிகளை உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications