ரூபாய் நோட்டு விவகாரம்... நாட்டில் கலவரம் வெடிக்கலாம்... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வார்னிங்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் கலவர சூழல் ஏற்பட்டுள்ளது என எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம்.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாட்டில் கலவரம் வெடிக்கலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் மீதான அனைத்து விசாரணைகளுக்கும் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி அனில் ஆர். தாவே உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

வேதனை தருகிறது...
பொதுமக்கள் பணத்துக்கு அங்கும் இங்குமாக அலைவது வேதனையைத் தருகிறது. மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுக்க பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். நாடு முழுவதும் பிரச்சனை இருப்பதால்தான் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

கதவை மூட முடியாது..
மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகின்றனர். எங்களால் நீதிமன்றத்தின் கதவுகளை மூடிவிட முடியாது. வேண்டுமானால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றுவது குறித்து மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.

கலவரமே வெடிக்கலாம்
இது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். மக்கள் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கிறார்கள்... ஒருவேளை நாட்டில் கலவரமே வெடிக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மக்கள் பொறுமையாக
அப்போது பேசிய அட்டர்னி ஜெனரல் ரோகத்கி, அப்படி ஒரு சூழல் நாட்டில் நிலவவில்லை. மக்கள் பொறுமையோடு வரிசைகளில் காத்திருக்கிறார்கள் என்றார். ஆனால் தலைமை நீதிபதி தாக்கூர், அப்படியெல்லாம் இல்லை.. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

47 பேர் பலி
மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி. நவம்பர் 8-ந் தேதிக்குப் பின்னர் இந்த ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர் என்றார். ஆனால் நீண்டு கொண்டே போகும் வரிசைகளை குறைப்பதற்காக, நாள்தோறும் மணிக்கு ஒரு முறை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம் என்றார் ரோகத்கி.

ஏன் ரூ100 நோட்டுகள் பற்றாக்குறை?
இதை நிராகரித்த தலைமை நீதிபதி தாக்கூர், ரூ100 நோட்டுகள் பற்றாக்குறையாக இருக்கிறதா? அது ஒன்றும் செல்லாத நோட்டு இல்லையே? அப்புறம் ஏன் அந்த நோட்டுகள் போதுமானதாக இல்லை? என கேள்வி எழுப்பினார்.

உச்சவரம்பு மாற்றம் ஏன்?
இதற்கு பதிலளித்த ரோகத்கி, ரூ100 நோட்டுகள் பற்றாக்குறையாக இருக்கின்றன. நாட்டில் 500, 1000 நோட்டுகளைத்தான் 80% க்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றார். அப்போது தலைமை நீதிபதி தாக்கூர் குறுக்கிட்டு, ஏன் பணம் மாற்றும் உச்சவரம்பை ரூ4500ல் இருந்து ரூ2,000 ஆக குறைத்தீர்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications