கட்டு கட்டாய் கரன்சி நோட்டு… ஹர்திக் படேல் மீது பணமழை பொழிந்த ஆதரவாளர்கள்
சூரத்: படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது, அவரது ஆதரவாளர்கள், கட்டு கட்டாக கரன்சி நோட்டுக்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஹர்திக் படேல் தலைமையில், படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சூரத்தில் நடந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சி ஒன்றில், ஹர்திக் படேல் கலந்து கொண்டார். அதில் ஹர்திக் பேசிய போது, உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள், அவர் மீது, ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தனர்.
இந்த காட்சிகளின் வீடியோ பதிவு, இப்போது ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஹர்திக்கின் நெருங்கிய நண்பர் தினேஷ் கூறுகையில், ''நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில், இது போன்று ரூபாய் நோட்டுகளை வீசியெறிவது குஜராத்தில் சகஜம். போலீசார், பேரணி நடத்த அனுமதி தராததால்தான், ஹர்திக், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்,'' என்று கூறியுள்ளார்.