காமன்வெல்த் ஊழல்: டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் 4 பேருக்கு 4 ஆண்டு; ஸ்வெஸ்கா அதிகாரிக்கு 6 ஆண்டு சிறை
டெல்லி: 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது தெருவிளக்குகள் அமைத்ததில் ரூ1.42 கோடி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் 4 பேருக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனையும் ஸ்வெஸ்கா பவர்டெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டி.பி.சிங்குக்கு 6 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காமன்ல்வெத் போட்டி ஊழல் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட முதலாவது வழக்கு இது.
2010 ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் போது டெல்லியில் சர்வதேச தரத்திலான தெருவிளக்குகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக 2008-ஆம் ஆண்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது. தெருவிளக்கு ஒப்பந்தத்தைப் பெற 5 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், அதில் ஸ்வெஸ்கா பவர்டெக் நிறுவனத்துக்கு சாதகமாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் அரசுக்கு மொத்தம் ரூ.1.42 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இன்று இவ்வழக்கில், டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் டி.கே. சுகன், ஓ.பி.மகாலா, வி.ராஜு, குர்சரண் சிங் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஸ்வெஸ்கா பவர்டெக் நிறுவனத்தின் இயக்குநர் டி.பி சிங்குக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
டெல்லி காமன்ல்வெத் போட்டி ஊழல் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட முதலாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications