அதி தீவிரப் புயலானது லெஹர்.. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது
ஹைதராபாத்: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள லெஹர் புயல் அதி தீவிரப் புயலாக மாறியுள்ளது. இது மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திரக் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கரையை மேலும் நெருங்கும்போது வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று க்ணிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகலுக்கு மேல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் மற்றும் கலிங்கப்பட்டனம் இடையே காக்கிநாடா அருகே இது கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் தற்போது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், நாளை முதல் கன மழை பெய்யத் தொடங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், புயல் கரைக்கு அருகே நெருங்கும்போது மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நெருங்கி வருவதால் ஆந்திர மாநில அரசு உஷார் நிலையில் உள்ளது. தேசிய இயற்கைப் பேரிடர் மேலாண்மை படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 குழுக்கள் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலும், விசாகப்பட்டனம், கிருஷ்ணா மாவட்டங்களில் தலா 6 மற்றும் மேற்கு கோதாவரியில் 5 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், கடற்கரையோரம் பெரும் சேதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மின் விநியோகம், சாலைப் போக்குவரத்தும் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வெள்ளத்தையும் மாவட்டநிர்வாகங்கள் எதிர்பார்த்துள்ளன. அதற்கேற்ற வகையில் தயார் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
கடலுக்குள் யாரும் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிகுந்த உஷார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர். 9 கடலோர மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அனைவரும் 24 மணி நேரமும் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக விசாகப்பட்டனத்தில் நான்கு ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ராணுவம், கடலோரக் காவல் படை, கடலோர போலீஸ், மாவட்ட போலீஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications