பாய்லின் புயல்... மனிதர்கள் தப்ப மரணித்துப் போயின விருந்தினராய் வந்த சைபீரிய பறவைகள்
ஸ்ரீகாகுளம்: பாய்லின் புயலின் கோரத்தாண்டவத்துக்கு முன்பே மனிதர்கள் காப்பாற்றப்பட்டு பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுவிட்டது....ஆனால் புயலின் போதும் புயலுக்கும் பின்னும் விருந்தினர்களாய் வந்த ஆயிரக்கணக்கான சைபீரிய பறவைகள் பலியாகிப் போனது ஸ்ரீகாகுளம்வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வங்கக் கடலில் மிகப் பெரும் புயலாக உருவெடுத்துவிட்டது பாய்லின் புயல் என்று அறிவிக்கப்பட்டு 10 லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு முன்னெச்சரிக்கையாகவே அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர். இதனால் பெருமளவு மனித உயிர்கள் பலியாவதை தடுத்துவிட்டதை பெருமையாகப் பேசிவருகிறோம்..

ஆனால் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான மைல்தொலைவில் இருந்து ஆண்டுதோறும் வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சுகளுடன் தாயகம் திரும்பும் சைபீரிய பறவைகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து போயுள்ளன.
சைபீரியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் பல்லாயிரக்கணக்கான சைபீரிய பறவைகள் ஸ்ரீகாகுளம் பகுதிக்கு வருகை தரும். இங்குள்ள ஆலமரம் மற்றும் புளியமரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சும் பொரித்து டிசம்பர் மாதம் குஞ்சுகளுடன் தாயகம் நோக்கி பறந்து செல்லும்...
ஆனால் இந்த ஆண்டு சைபீரிய பறவைகளின் வாழ்க்கையை பாய்லின் புயல் சூறாவாளியாய் சுருட்டிப் போட்டுவிட்டது. புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் போதுமான இரை கிடைக்காமல் கடந்த நான்கைந்து நாட்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்து போய்விட்டன. குஞ்சுகளை பாதுகாத்து வைத்திருந்த மரங்கள் வேரோடு வீழ்ந்து போய்விட்டன.
இந்த கோரத்தாண்டவத்தில் சிக்கி தத்தளித்த சுமார் 200 பறவைகளை வனத்துறையினர் மீட்டு மாற்று உணவுகளை வைட்டமின் மருந்து கலந்து கொடுத்து பாதுகாத்து வருகின்றனர். தங்களது விருந்தினர்களாய் வந்து தங்களது மண்ணிலேயே சைபீரிய பறவைகள் மடிந்து போனது ஸ்ரீகாகுளம் விவசாயிகளை பெரும் சோகத்தில் மூழ்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications