யாஸ் புயல் வங்கக் கடலில் உருவானது...26ல் கரையைக் கடக்கும் - மீட்புப்படையினர் தயார் நிலை
கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக உருவானது. இது புயலாக இன்று மாறியுள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் இடையே இ
கொல்கத்தா: வங்கக்கடலில் இன்று உருவாகியுள்ள யாஸ் புயல் 26ஆம் தேதி ஒடிசா, மேற்குவங்கம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நிலையில் நிவாரண பொருட்கள், மீட்புப்பணி தளவாடங்கள் நிவாரணப் பொருட்கள் அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 606 மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக உருமாறி வரும் 26ஆம் தேதி காலையில் ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான்கு மாநில முதல்வர்களுடன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய வானிலை மையம்
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மற்றும் ஹவுரா நகரில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும். இதேபோன்று, மழை பெய்யும்பொழுது, மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

முன்னெச்சரிக்கை
இதையடுத்து, ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் போதிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்தமான் தீவுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புக்குழுவினர்
புயல் தற்காப்பு நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. அந்தவகையில் புயல் மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினரை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து உள்ளது.
மீட்பு பணிகளுக்கான தளவாடங்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு சீரமைப்புக்கான கருவிகளையும் அனுப்பி வைத்து உள்ளது.
இதைப்போல பல்வேறு மத்திய அமைச்சகங்களும் புயல் முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

சிறப்பு முகாம்கள் தயார்
இது தொடர்பாக 4 மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவு நிர்வாகி ஆகியோருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், புயல் பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து, அங்குள்ள கொரோனா சிறப்பு முகாம்களில் உள்ள நோயாளிகளை மீட்டு வேறு முகாமிற்கு மாற்ற வேண்டும், கடலோர மாவட்டங்களில் சுகாதார வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மருத்துவமனைகளில் மின்சாரம், தண்ணீர், எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புயல் மீட்பு நிவாரணப் பணிகள்
இதற்கிடையே புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் விமானப்படை களமிறங்கி இருக்கிறது. நிவாரண பொருட்கள், மீட்புப்பணி தளவாடங்கள் என 57 டன் பொருட்கள் பல்வேறு இடங்களில் இருந்து அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தயார் நிலையில் மீட்புப்படை வீரர்கள்
606 மீட்புப்படை வீரர்கள் புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் புயல் நிவாரண நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் 11 போக்குவரத்து விமானங்கள், சுமார் 25 ஹெலிகாப்டர்களை விமானப்படை தயாராக வைத்து உள்ளது. இதைப்போல கடற்படையும் 4 போர்க்கப்பல்கள் மற்றும் ஏராளமான விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications