சொத்துக்குவிப்பு புகார்: மாயாவதிக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட்
டெல்லி: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இம்மனுவை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் மற்றொரு முன்னாள் முதல்வரான மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாரும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளன.
மாயாவதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்தவர் கமலேஷ் வர்மா. அவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு புகார் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதாவது முன்னர் நன்கொடைகளை பெற்று கணக்கில் காட்டாமல் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக மாயாவதி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விசாரணை செய்து, மாயாவதி குற்றமற்றவர் என தீர்ப்பளித்தது.
ஆனால் தற்போது மாயாவதி மீது புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கமலேஷ் வர்மா மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மாயாவதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இருப்பினும் இதை ஏற்க முடியாது; உண்மைகளின் அடிப்படையில்தான் விசாரணை நடத்த முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சிபிஐ தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, மாயாவதி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட பிறகு மீண்டும் விசாரணை நடத்துவது தேவையற்றது என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து இம் மனு மீது உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications