அடுத்த சர்ச்சைக்கு ஆயத்தம்... புத்தகம் வெளியிடுகிறார் மன்மோகன்சிங் மகள்!
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தொடர்பாக அடுத்தடுத்த புத்தகங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய சூழ்நிலையில் அவரது மகள் தாமன்சிங் புத்தகம் ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சிக் காலத்தை விமர்சிக்கும் வகையில் அவரது முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு, முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் ஆகியோர் புத்தகங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும் தனது தந்தையிடம் ஏகப்பட்ட ரகசியங்கள் இருக்கின்றன என்று குண்டு போட்டிருந்தார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மகள் தாமன்சிங் தம் பங்குக்கு ஒரு புத்தகம் எழுதி அடுத்த சர்ச்சைக்கு ஆயத்தமாகி இருக்கிறார்.
தாமன்சிங் எழுதும் புத்தகத்தின் பெயர் "Strictly Personal, Manmohan and Gursharan". இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்றுக்கு தாமன்சிங் அளித்த பேட்டியில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:
மன்மோகன்சிங் பற்றி மகள் தாமன் சொல்வது என்ன?
- 2009ஆம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறாது என்றுதான் என் தந்தை கருதினார்.
- தமது பதவி காலத்தில் சவால்களை எளிதாக எதிர்கொண்டார்.. சவால்களை துணிவோடு எதிர்கொண்டார்..
- 1991ஆம் ஆண்டு ஒரே நாள் இரவில் நாட்டின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தன் காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்தும் முன்னெடுத்தார்.
- இன்னும் 5 ஆண்டுகாலம் பிரதமராக இருந்திருந்தால் என் தந்தை ஏராளமானவற்றை செய்து முடித்திருப்பார்.
- சி.சுப்பிரமணியத்தை என் தந்தை பெரிதும் மதிப்பவர்.. அவர் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர். அவரை அமெரிக்க ஏஜெண்ட் என்று கூட சொன்னார்கள்.. அதிரடியாக ஒரு மாற்றம் என்பதை ஏற்கத்தான் சிலருக்கு பிடிக்காது.
- சஞ்சய் பாரு, நட்வர்சிங் இருவரும் எழுதிய புத்தகங்களை நான் படிக்கவில்லை.. நட்வர்சிங்கின் புத்தகம் அரசியல் பற்றியது.. எனக்கு பொதுவாக அத்தகைய அரசியல் புத்தகங்கள் பிடிப்பதும் இல்லை..
- நான் புத்தகம் எழுதுகிறேன் எனில் என்னுடைய பெற்றோரிடம் நான் கண்டறிந்த விஷயங்களை பதிவு செய்கிறேன். அதைத்தான் வெளிப்படுத்துகிறேன்.
- சர்ச்சைக்குரிய நேரங்களில் பிரதமர் பதவியில் இருந்து என் தந்தை விலக வேண்டும் என்று நாங்கள் தனிப்பட்ட முறையில் நினைத்திருக்கிறோம்.. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை வேறு.. அரசியல் வேறு என்பதில் உறுதியாக இருந்தோம்.
- கிரிமினல் எம்.பி.க்கள் தொடர்பான அவசர சட்டத்தின் போது ராகுல் என் தந்தையை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் அமெரிக்காவில் பயணத்தில் இருந்தார். என் தந்தை மிகவும் வருத்தப்பட்டார்.
- சோனியாவுடனான நட்புறவு எப்படி இருந்தது என்பது பற்றி என் தந்தையிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
- என்னுடைய தந்தையின் ஆட்சிக் காலம் இன்று வேண்டுமானால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம்.. ஆனால் அவரது பணி மகத்தானது.












Click it and Unblock the Notifications