ஜாக்பாட் இல்லை! கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி.. விசாரணைக்கு அழைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி டெபாசிட் ஆகியுள்ளதை அடுத்து அவருக்கு சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். இவர் வேறு ஒருவரின் நிலத்தில் கூலித் தொழிலாளியாவார். இவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவருடைய வங்கிக் கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதுகுறித்து அறிவிப்பை சைபர் செல் துறையினர் வீட்டு வாசலில் ஒட்டியுள்ளனர். அப்போதுதான் தனது வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி டெபாசிட் ஆகியுள்ளது நசிருல்லாவுக்கு தெரியவந்தது.
வங்கிக் கணக்கில் திடீரென ரூ 100 கோடி பணம் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணைக்காக வரும் 30 ஆம் தேதிக்குள் ஆஜராகும்படி நசிருல்லாவுக்கு சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து நசிருல்லா கூறுகையில் காவல் துறையினரிடம் இருந்து விசாரணைக்காக அழைப்பு வந்துள்ளது.
எனக்கு தூக்கமே வரவில்லை. எந்த தவறும் செய்யாத நான் ஏன் விசாரணைக்கு போக வேண்டும். எனக்கு எதுவும் தெரியவில்லை. எனது வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மையா என நான் பல முறை சோதனை செய்கிறேன். இதுகுறித்து உண்மையை அறிய வங்கிக் கணக்கு பாஸ் புக்குடன் வங்கி கணக்கு முடக்கப்படுவதற்கு முன் சென்றேன்.
அப்போது அந்த கணக்கில் வெறும் ரூ 17 இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் எப்படித்தான் ரூ 100 கோடி வந்தது என்றே தெரியவில்லை. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது என்றார் நசிருல்லா.












Click it and Unblock the Notifications