தலையில் "ஹெல்மெட்" அணிந்து... குதிரையில் ஊர்வலம் போன தலித் மாப்பிள்ளை!
ராட்லம்: மத்திய பிரதேசத்தில் குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலம் சென்ற மணமகன், பாதுகாப்பு கருதி தலையில் ஹெல்மெட் அணிந்து சென்றார். காரணம் மணமகன் தலித் என்பதால், தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் தான்.
மத்திய பிரதேசம் ராட்லம் மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று இரவு திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. மாப்பிள்ளை பவன் மால்வியா அடர் நிறத்தில் உடையணிந்து, நீண்ட நெக்லஸ் போன்ற ஆபரணம் அணிந்து, கையில் கத்தியுடன் குதிரையில் ஊர்வலமாக வந்தார். ஆனால், அவரது தலையில் தலைப்பாகைக்குப் பதிலாக ஹெல்மெட் அணிந்து வந்திருந்தார்.

இந்த ஊர்வலம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் பவன் குடும்பத்தினர் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் கல் வீச்சுத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர்.
பவன் தலித் இனத்தைச் சேர்ந்தவர். அவரது திருமணத்தில் குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலம் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாமல், உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். எனவே, கல் வீச்சுத் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே மாப்பிள்ளை பவன், இவ்வாறு ஹெல்மெட் அணிந்து குதிரையில் ஊர்வலமாகச் சென்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், திருமணத்திற்கு தக்க பாதுகாப்பு அளித்தனர். மேலும், கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதாக 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications