மத்திய பிரதேசத்தில் தொடரும் கொடூரம்... மேலும் ஒரு தலித் பெண்ணின் மூக்கறுப்பு
மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு தலித் பெண்ணின் மூக்கை அறுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
போபால்: மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தன் வீட்டில் பணிபுரியும் தலித் பெண்ணின் மூக்கை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது,
கடந்த திங்கட்கிழமையன்று நரேந்திரசிங்கும், 32, அவரது அப்பா சாகப் சிங்கும் தலித் பெண்ணின் கணவரை அடித்தனர். அவர்கள் கூறிய வேலையை செய்ய மறுத்த காரணத்தால் அடித்து துவைத்துள்ளனர். காயமடைந்த கணவரை மருத்துவமனையில் அனுமதிக்க எடுத்துச்சென்றார்.
அப்போது அந்த பெண்ணையும் அடித்து தாக்கியுள்ளனர். அப்போது அந்த பெண்ணின் மூக்கை அவர்கள் அறுத்ததாக தெரிகிறது. கடந்த திங்கட்கிழமை நடந்த சம்பவம் வியாழக்கிழமையன்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த பெண்ணின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்பே நடந்த சம்பவத்தை கூற முடியும் என்று இன்ஸ்பெக்டர் பஜ்ரி கூறியுள்ளார்.
இது குறித்து மத்தியபிரதேச மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடூர சம்பவம் பற்றி மகளிர் ஆணைய தலைவர் லதா வாண்கடே விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடுகளில் பணிபுரியும் தம்பதியரை அடித்து காயப்படுத்தியதோடு, பெண்ணின் மூக்கை அறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டம் நரோட்டம்பூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல ஒரு சம்பவம் நடைபெற்றது. ரந்தீர் என்பவருக்குச் சொந்தமான வயலில் தலித் பெண் ஒருவர் கால்நடைக்கு புல் அறுத்துள்ளார். அப்போது நில உரிமையாளர் ரந்தீரும் அவரது மகனும் வந்தனர். தலித் பெண் நுழைந்ததால் தனது நிலம் தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி அப் பெண் வைத்திருந்த அரிவாளை வாங்கி அவருடைய மூக்கை நில உரிமையாளர் அறுத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.