நேபாளத்தில் மீட்பு பணியில் முக்கிய பங்காற்றும் இந்திய ஹெலிகாப்டர் த்ருவ்
பெங்களூர்: அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களான த்ருவ் நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளுக்கு பேருதவியாக உள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா உதவி செய்து வருகிறது. மீட்பு பணியில் இந்திய ராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணியில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரான த்ருவ் பேருதவியாக உள்ளது.
இது குறித்து ஹெச்ஏஎல் தலைவர் சுவர்ன ராஜு ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
த்ருவ்
ஆபத்து காலத்தில் சிறப்பாக செயல்படும் ஹெலிகாப்டர்கள் என்பதை த்ருவ் மறுபடியும் நிரூபித்துள்ளது. 80 மணிநேரத்தில் 50 முறை பயணம் மேற்கொண்டு மீட்பு பணிக்கு உதவியுள்ளது த்ருவ் ஹெலிகாப்டர்கள்.
உபகரணங்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உபகரணங்கள், நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்றுவிட்டு அங்கிருந்து மக்களை மீட்டு வருகிறது. நேபாள ராணுவம் த்ருவ் ஹெலிகாப்டர்களை மீட்பு பணியில் ஈடுபடுத்துவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தியா
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இயற்கை சீற்றம் ஏற்படும்போது எல்லாம் மீட்பு பணியில் த்ருவ் ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. அதன் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.
நேபாள ராணுவம்
நேபாள ராணுவத்திற்கு அண்மையில் தான் இந்தியா த்ருவ் ஹெலிகாப்டர் ஒன்றை வழங்கியது என்று சுவர்ன ராஜு தெரிவித்துள்ளார். நிவாரணப் பொருட்களுடன் இந்தியாலில் இருந்து இன்று ஒரு ஹெலிகாப்டர் நேபாளம் செல்கிறது.
நிவாரணப் பொருட்கள்
ஹெலிகாப்டர் தவிர லாரிகள் மூலமும் கான்பூரில் இருந்கு நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன. 4,950 போர்வைகள், 525 டென்ட்டுகள், 50 தார்பாலின் மற்றும் 800 பிளாஸ்டிக் ஷீட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.